மயானங்களைத் தேடி

மயானங்களைத் தேடி

மயானங்களைத் தேடி…

1533ஆம் ஆண்டின் அந்தக் குளிர் காலத்தில், ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் என்னும் அந்த பத்தொன்பது வயது இளைஞன் பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் பல்கலைகழகத்திற்கு சர்ஜரி படிக்க வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கவரப்பட்டிருந்த கேலனின் (anatomy) உடல்கூறியல் மற்றும் (pathology) நோய்கூறியல் (என் மொழிபெயர்ப்பு சரியா?) படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் பாரிஸ் நகருக்கு வந்திருந்தான். வெசாலியஸ் வந்து சேர்ந்த நேரம், அவனது பல்கலைகழத்தில், உடல் கூறியல் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இறந்த உடல்களை பகுப்பாய்வு செய்ய எந்த வசதிகளும் இல்லாத நிலையில், அவனது ஆய்வுக் கூடம் மிக மோசமாக இருந்தது. மொத்த மனித உடலுக்கான ஒரு நல்ல வரைபடம் கூட இல்லாத நிலையை கண்டு அவன் மிகவும் மனம் நொந்துப் போனான்.

மனித உடலுக்கான ஒரு வரைபடத்தை தானே உருவாக்குவது என்று முடிவு செய்தான். அந்தக் கணத்திலிருந்து அவன் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்ல வேண்டும். பிணங்களைத் தேடி ஊர் ஊராக அலையத் தொடங்கினான். பாரிஸ் நகரில் உள்ள ஓவ்வொரு சுடுகாடும் அவனுக்கு அத்துப் படியானது. பல நூறு பிணங்களை அறுத்து ஆராய்ச்சி செய்து, சில ஓவியர்களின் துணையுடன் அவன் தனது வரை படத்தை வரைய ஆரம்பித்தான். 1538ஆம் ஆண்டு முதல், அவன் தயாரித்த மனித உடலுக்கான வரைபடத்தை, தகடாகவும், வரைபடமாகவும் வெளியிடத் துவங்கினான்.

இறந்த பிணங்கள் அவனது வரைபடத்தின் மூலமாக உயிருடன் வெளிவரத் துவங்கின. மனித உடலில் ஓடும் நரம்புகளை, இரத்த நாளங்களை, அவைகள் சென்று சேரும் இடங்களை எல்லாம் மிகத் தத்ரூபமாக பதிவாகியிருந்தன. CT ஸ்கானர் இல்லாத அந்த காலத்திலேயே மனித மூளையை குறுக்கும் நெடுக்காக அதிலிருந்த மிக சிக்கலான பாகங்களைக் கூட தெளிவாக குறிப்பிடும் வகையில் அவை அமைந்திருந்தன. அவனின் அந்த முயற்சி தேவையின் அடிப்படையில் அமைந்த மிக அறிவார்ந்த முயற்சியாக இருந்தன.

இப்போது அவனுக்கு மிகப் பெரிய சிக்கல் ஒன்று காத்திருந்தது. அவனது இந்த முயற்சியில் ஹிப்போகிரட் மற்றும் கேலன் கூறியது போல அந்த நான்கு வகையான திரவங்களை கண்டறிய வேண்டியிருந்தது. அதில், முதல் மூன்று வகையான திரவத்தை ( இரத்தம், மஞ்சள் பித்த நீர், சளி ) கண்டறிந்த வெசாலியஸுக்கு, கருநிற பித்த நீரை மட்டும் மனித உடலில் கண்டு பிடிக்க முடியவேயில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், எத்தனையோ எண்ணற்ற பிணங்களை பரிசோதனை செய்து பார்த்தும், மனித உடலில் எங்கும் கரு நிற திரவத்தை பார்க்கவே முடியவில்லை.

வெசாலியஸ் மேல் படிப்பு படிக்க வந்தது, கேலனின் பெயரில் ஏற்படுத்தப் பட்டிருந்த கல்வி உதவித் தொகையால்தான். அவன் தனது வாழ்நாள் முழுவதும் கேலனின் அறிவியல் கூற்றினை படித்து, அதை ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டு வந்தவன். ஆனால், கேலனின் புகழ்பெற்ற அந்த கருநிற பித்த திரவத்தை மட்டும் அவனால் கண்டுபிடிக்க முடியவேயில்லை. கான்ஸர் நோய்க்கு காரணம் என்று உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் நம்பிக் கொண்டிருந்த கருநிற திரவம் கண்டு பிடிக்க முடியாமலேயே போயிற்று.

கான்ஸர் நோய் உடலில் உள்ள ஒரு கருநிற பித்த திரவம் அளவிற்கு அதிகமாக சுரக்க ஆரம்பிப்பதால் ஏற்படுகிறது என்றும், எனவே அந்த கான்ஸர் கட்டியினை அறுவை சிகிச்சை செய்தாலும், மீண்டும் அந்த நீர் அங்கு வந்து நிரப்பிக் கொள்ளும் என்றும் மருத்துவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்க்கப் பட்டது. முற்றிய கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சையும் ஒரு வித தீர்வு என்னும் புதிய நம்பிக்கை கீற்று உருவானது.

கேலனின் கூற்றினை மெய்ப்பிக்க வேண்டி ஆரம்பிக்கப் பட்ட வெசாலியஸின் ஆய்வு, கடைசியில் கேலனின் கூற்று தவறானது என்று நிருபித்துக் காட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *