மூன்று காரணங்களுக்காக எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை நிறுத்துவது என்று நாங்கள் முடிவெடுத்தோம்.
ஒன்று, புலி எந்த நேரமும் முழுபோதையில் தெருவில் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டே இருப்பது.
இரண்டு, புலி முழுபோதையில் எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் உள்ளே நுழைந்து சமையலறையில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, சோற்றை எடுத்துப் போட்டு சாப்பிடுவது.
மூன்று, எங்கள் தெருவுக்குள் புதிதாக யார் நடந்து சென்றாலும் அவர்களை நிறுத்தி அலப்பரை கொடுத்து, அவர்கள் சட்டைப்பையில் கையை விட்டு தனது குடிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக் கொள்வது.
இது அப்பட்டமான ரவுடித்தனம். பகல் கொள்ளை.
எங்கள் தெரு பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பெரிய சாலையை ஒட்டிய இன்னொரு குறுகிய சாலை. எனவே, புலியின் நடமாட்டம் அறியாத கிராமத்து மனிதர்களே பெரும்பாலும் புலியின் இரையாகச் சிக்குவார்கள். ஒரு சில நேரங்களில் அப்பாவித்தனமாகத் தோற்றமளிக்கும் உள்ளூர் இளைஞர்கள் சிக்கிக் கொள்வார்கள். இதில்தான் எங்கள் தெருவுக்கும், இங்கே வசிக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் பெரும் அவமானம் வந்து சேர்கிறது.
ஆனால், புலியை யாரும் ஒன்றும் பண்ண முடியாது. ஏனெனில் புலி எங்கள் வார்டு கவுன்சிலர். அதுவும் ஆளும் கட்சியின் கவுன்சிலர். யாராலும் அசைக்க முடியாமல் தொடர்ந்து ஜெயித்து வரும் புலியின் நிஜப்பெயர் சுந்தரமூர்த்தி. அந்தப் பெயர் புலிக்கே நினைவிருக்காது. நல்ல மப்புலே உற்சாக மூட்லே இருந்தால் வேட்டியை கழட்டி மடித்து வைத்து விட்டு, அரை நிஜாரில் புலி ஆட்டம் ஆடிக் காட்டுவது புலியின் ஹாபி. அவரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டாலும், ஹலோ! நான் புலி எம்.சி (முனிசிபல் கவுன்சிலர்) பேசறேன்னு சொல்றதுதான் வழக்கம்.
புலியின் அட்டகாசங்களை இனியும் பொறுப்பதில்லை என எங்கள் தெரு இளைஞர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி வரும் கவுன்சிலர் வேட்பாளரை நிறுத்தி புலியைத் தோற்கடிப்பது என முடிவு செய்தோம்.

எங்கள் வார்டு என்பது மிக நீளமான ஒரு தெரு, அதில் ஒரு சில குறுக்குச் சந்துகள். அவ்வளவுதான். மொத்தமுள்ள 1380 வாக்குகளும் இதற்குள்ளாகவே அடங்கிவிடும். குறுகிய சந்து என்பதால் வாகனங்கள் உள்ளே வர வாய்ப்பில்லை. எனவே எங்கள் தெருவே பசங்களுக்கு கிட்டிப்புள், ஐஸ்பாய், கபடி விளையாடவும், பெண்களுக்குப் பாண்டி ஆடவுமான கிரவுண்ட் ஆக இருந்தது. இதன் காரணமாகவே எங்கள் தெருவில் இந்த முனையிலிருந்து அந்த முனை வரையிலான அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தோம்.
சீனு வீட்டு மொட்டை மாடியில்தான் எங்கள் முதல் கூட்டம் நடந்தது. சீனுவோட அண்ணி பத்து, பன்னிரெண்டு வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதற்காக அங்கே பெரிய கூரைக் கொட்டகைப் போடப்பட்டு, ஒரு புறம் பெரிய கரும்பலகை மாட்டப்பட்டிருக்கும். உட்கார பெஞ்சு நாற்காலி எல்லாம் இருக்காது. தரை முழுக்கப் பாய் விரிக்கப்பட்டிருக்கும். எந்தப் பக்கமிருந்தேனும் மலைக்காற்று வீசிக் கொண்டேயிருப்பதால் ஃபேன் தேவைப்படவில்லை.
முதல் கூட்டத்திலேயே வேட்பாளரை தேர்ந்தெடுத்து விட்டோம். சீனுதான் எங்களின் வேட்பாளர். ரொம்ப பிகு பண்ணிகொண்டு பிறகு ஒற்றை பைசாகூட அவனுக்கு செலவில்லை என்ற உத்தரவாதம் தந்த பிறகு ஒருவழியாக ஒப்புக் கொண்டான். தெருவுக்கான பொதுக்காரியம் என்பதால் செலவை நண்பர்களே பகிர்ந்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தோம்.
கோடைவிடுமுறை என்பதால் அடுத்த ஒரு மாதத்துக்கு டியூசன் ஏதுமில்லை. அவர்கள் வீட்டிலும் வெளியூர் சென்றிருந்தனர். மேலும் மொட்டைமாடிக்குச் செல்லும் படிகள் தெருவிலிருந்தே துவங்குவதால், யாருக்கும் தொந்தரவின்றி இந்த இடத்தையே தேர்தல் அலுவலகமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி பல வசதிகள் இருந்ததால் மட்டும் சீனுவை வேட்பாளராக ஆக்கவில்லை. உண்மையில் எங்க செட்டில் அதுவரையில் எங்கள் தெருவில் எந்தவொரு பெண்ணுக்கும் காதல் கடிதம் கொடுக்காத இரண்டாவது ஜெண்டில்மேன் சீனு மட்டுமே. முதல் ஜெண்டில்மேன் நான். பத்தரைமாத்துத் தங்கம் என்பது எங்கள் தெரு தேவதைகளின் அம்மாக்கள் சீனுவுக்கு வைத்திருக்கும் பெயர்.
டேய் இன்ஜினியர்.. உனக்கு லீவுதானே? நீதான் எலக்சன் ஆஃபீஸ் இன்சார்ஜ் என்றான் மணவாளன்.
அங்கிருந்த மொத்தம் முப்பத்திரண்டு பேரில் நான் மட்டும்தான் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் அதிகமாக பொறியியல் பட்டதாரிகள் வராத தொண்ணூறுகளின் துவக்கம் அது. தெருவிலேயே நான்தான் முதல் இன்ஜினியர் ஆகப்போறேன் என்பதாலே அனைவரும் அப்படித்தான் அழைப்பார்கள். ஃபைனல் செமஸ்டர் லீவில் ஊருக்கு வந்திருந்தேன்.
அடிச்சேடா லக்கி ப்ரைஸ்! ஜஸ்ட் எதிர்வீடுதான் வசுமதியோடது. இங்கிருந்தபடியே தெனமும் பார்த்துக்கலாம் என்றான் இளங்கோ காதருகே வந்து. வசுமதி எங்கள் தெருவின் பேரழகி. அட்லீஸ்ட் என் கண்களுக்கு. என்னைப் பார்த்தாலே முகத்துலே ஒரு வெளிச்சம் வந்துரும் அவளுக்கு. ரெண்டு பக்கமும் ஓர் ஈர்ப்பு இருந்தது. விரைவில் ஒரு கடிதம் கொடுத்து உறுதி செய்து கொள்ளக் காத்திருந்தேன்.
பார்த்துக்கிறேன். ஆனா, ப்ராஜெக்ட் ரெவியூக்கு காலேஜ்லே கூப்பிட்டா நடுவுலே ரெண்டு மூணு நாள் போய் வரவேண்டியிருக்கும் என்றேன்.
அதெல்லாம் வரப்போ பார்த்துக்கலாம் என்றான் சைக்கிள்கடை ஏழுமலை. எங்கள் பள்ளித்தோழன்.
நிதிக்குழு, பிரச்சாரக்குழு எல்லாம் சடசடவென அமைக்கப்பட்டது.
சரி! புலியை எப்படி சமாளிக்கப் போறோம்? என்றான் இளங்கோ.
சே! சே! புலி என்னிக்காவது நம்ம வார்டு ஆளுங்களிடம் தகறாறு பண்ணியிருக்கா என்ன? என்றேன்.
நம்மகிட்ட ஏதாச்சும் வேலை காட்டினால், புலியோட வாலை ஒட்ட நறுக்கிட வேண்டியதுதான் என கருவினான் ஏழுமலை.
புலியை கூட சமாளிச்சுட்லாம். முத்தண்ணன் மொகத்துலே எப்டி முழிக்கிறதுன்னுதான் தெர்லே என்றான் சீனு.
முத்தண்ணன் எங்க தெருவிலே விறகுமண்டி வச்சிருக்கார். பின்னாடியே வீடு. ரொம்ப நல்ல மனுஷன். எதிர்கட்சி வேட்பாளரா தொடர்ந்து மூன்று முறை புலியை எதிர்த்து நின்னு மூணு முறையும் தோத்தவர். எங்க எல்லோருக்கும் அவரோட வெறகு மண்டிதான் எப்போதும் மீட்டிங் பாயிண்ட். டீ கணக்கு எப்பவும் அவர் தலையிலேதான் விடியும். சிரிச்சிட்டே எங்களின் அரட்டைகளை வேடிக்கப் பார்ப்பார்.
பேசாம, நாம முத்தண்ணனையே இந்த வாட்டியும் நிறுத்தி ஜெயிக்க வச்சுடலாமேடா என்றான் சீனு.
வாய்ப்பேயில்லே! அந்தாளோட பலம் நானூறு ஓட்டுதான். அதுக்கு குறைவாவும் வாங்க மாட்டார்! கூடவும் வாங்க மாட்டார்! என்று பின்னாலிருந்து சத்தமாக குரல் கொடுத்தார் தோழர்.
வாங்க தோழர்! நீங்க எப்ப வந்தீங்க?
மொதல்லேயே வந்துட்டேன். முத்துவாலே இந்த ஜென்மத்துலே புலியை ஜெயிக்க முடியாது. புது முகம் ஒண்ணை போட்டுதான் அடிக்கணும். சீனு நல்ல சாய்ஸ்தாம்பா! என்றார்.
சீனுவின் முகத்தில் முதல் முறையா பீதி மறைந்து ஒரு தெளிவு வந்தது.
அப்போ எங்க சார்புலே நீங்களே நில்லுங்களேன் தோழர்?
எங்கத் தெருவிலே பொதுக்காரியம் எதுவென்றாலும் தோழர்தான் முன்னே இருந்து செய்வார். மாலையில் சின்னப் பசங்களுக்கு பாரதி பாடல்கள், ஆத்திச்சூடி எல்லாம் சொல்லித் தருவார்.
அதெல்லாம் எங்க கட்சி ஒத்துக்காதுப்பா.. கட்சியை மீறி நான் தனியால்லாம் நிக்க முடியாது. சீனுவே இருக்கட்டும். நாமல்லாம் ஒண்ணா ஒத்துமையா நின்னு மோதிப் பாத்துரலாம் என்றார் தோழர்.
ஒரு கோபத்தோடு கூட்டப்பட்ட அந்தக் கூட்டம் ஒரு குறிக்கோளுடன் முடிந்தது.
நாங்க க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் நாலஞ்சு பேர் சீனுவை தூக்கிட்டுப் போய் அவன் செலவுலே மெட்ராஸ் டீக்கடையிலே டீயும், பிஸ்கெட்டும் சாப்பிட்டுட்டு டி.ராஜேந்தர் படத்துக்குச் சென்றோம்.
எங்கள் முடிவு ஒண்ணும் ரகசியமானது அல்ல! தோழரே எப்படியும் டீக்கடையில் நூறு பேரிடம் சொல்லியிருப்பார். நாங்கள் முதல் ரியாக்சனை புலியிடம் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம்! ஆனால், வந்ததோ எதிர்கட்சியோட நகரச் செயலாளரிடமிருந்து! எங்களை அவரோட வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்லி ஆள் அனுப்பி விட்டிருந்தார்.
மாநிலத்திலே ஆளும்கட்சியா இருக்கும் கட்சி எங்க ஊர் முனிசிபல் தேர்தலில் ஜெயிக்காது என்பது ஒரு நம்பிக்கை! மாநிலத்திலே எதிர்கட்சியா இருக்கும் கட்சிதான் எங்க ஊர் முனிசிபாலிட்டியிலே எப்பவும் ஆளும்கட்சி.
நாங்க பிறக்கிறதுக்கு முன்னேயிருந்து அதோட நகரச் செயலாளர் ஒரே நபர்தான். கட்சிக்காரன் எந்த நேரத்துலே அவர் வீட்டுக்குப் போய் எழுப்பினாலும் லுங்கியை இழுத்துக் கட்டிட்டு முண்டா பனியனோடவே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் எப்படியாவது பேசி காப்பாத்தி விட்டுடுவார்.
நகரச்செயலாளர் உடனான சந்திப்புக்கு மறுநாள் காலையிலே ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து என்னை எழுப்பி உடன் கூட்டிச் சென்றனர். நான், சீனு, ஏழுமலை, இளங்கோ உடன் தோழரும் இணைந்து கொள்ள நாங்கள் புறப்பட்டோம்.
நகரச் செயலாளரின் தெரு முனையிலேயே சைக்கிளில் இருந்து இறங்கி கொண்டவர், நான் கூட வரது சரியாருக்காது! இங்கியே டீக்கடையிலே இருக்கேன்! நீங்க போய் பேசிட்டு வாங்க என கடைசி நிமிடத்தில் கழட்டிக் கொண்டார் தோழர்.
வாசலில் ஓரமாக நகரத்தோட டிவிஎஸ் 50 நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவரது மனைவி வாசலைப் பெருக்கி கொண்டிருந்தார்.
அண்ணி! அண்ணன் வீட்லே இல்லியா? என்றான் ஏழுமலை.
இல்லாம எங்க போவப்போறார்! இன்னும் கடை தொறந்துருக்காதே! நீங்க நேரா கெணத்தாண்ட போய் பாருங்க என்றார்.
வீட்டுக்குப் பின்கட்டுலே வெற்றுடம்புடன் கிணத்து மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார் நகரம்.
ஏழுமலையை அவருக்குத் தெரிந்திருந்தது.
வாப்பா! என்ன சுயேட்சை போடப்போறீங்கன்னு பேசிக்கிறாங்க என்று பட்டென விஷயத்துக்கு வந்தார்.
ஆமாண்ணா! பசங்கல்லாம் இந்த வாட்டி புலியை தோக்கடிச்சே ஆகணுங்கிறாங்க. உங்க ஆள் செலவும் பண்ண மாட்டேங்குறார். தெருவிலே எறங்கி கால்லே உழுந்து ஓட்டுக் கேட்கவும் மாட்டேங்குறார். ரெண்டு வாட்டி கையெடுத்துக் கும்பிட்டுட்டு சைக்கிள் ரிக்சாவுலே போயிட்டா புலியை ஜெயிச்சுட முடியுமாண்ணா? என்றான் ஏழுமலை.
யாரு? முத்துவைதானே சொல்றே? அவன் சுயமரியாதைக்காரனாச்சேப்பா.. கால்லேலாம் விழமாட்டானே! ஆனா, நிறைய செலவு பண்றேன்னுதானே என்கிட்டே சொல்லுவான்?
எங்கே பண்றார்! நல்ல மனுஷன்தான். எங்களுக்கும் வேண்டியவர்தான்.. ஆனா, ஓட்டு வாங்கறதுலே கோட்டை விட்டுடுறாரே?
ஆமாமாம்! அந்த நானூறு ஓட்டை தாண்ட மாட்டான். அப்ப, நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?
நகரத்தோட இந்தக் கேள்விக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எங்களுக்குத் தெரியலை. ஆமாம்னு சொன்னா, எதிர்த்து பேசறாப்லே இருக்கும்னு அமைதியா இருந்தோம்.
நகரம் கிணத்தை விட்டு கீழிறங்கி, வாளித்தண்ணியில் கை அலம்பிட்டு, எங்கள் அருகில் வந்து, மிகச் சரியாக சீனுவின் தோள் மீது கை போட்டவாறு, ‘தைரியமா நில்லு! 1400 ஒட்டுலே முத்து 400 ஓட்டை வாங்கிடுவான். மீதி இருக்கும் ஆயிரத்துலே உங்க குறி 501. அவ்ளோதான். உங்க கூட்டளிங்க, அவங்க அம்மா, அப்பான்னு ஈஸியா இதை வாங்கிடலாம். நான் முத்துவை நிறுத்தலைன்னா, நீ 800 ஓட்டு வாங்கினாதான் ஜெயிப்பே! அது இன்னும் கஷ்டம். புரியுதா? என்றார்.
இந்தப் புதுவிதமான கணக்கைக் கேட்டு நாங்க உறைஞ்சு போய் நின்னுட்டோம்.
அவர் கட்சிக்காரன் எத்தனை ஓட்டு வாங்குவான்னும் அவருக்குத் தெரியுது. எங்களாலே எத்தனை ஓட்டு வாங்க முடியும்னு தெரியுது. எப்படி வாங்கணும்னும் சொல்லித் தரார்! தன்னோட கட்சிக்காரன் தோப்பான்னு தெரிஞ்சும் எதிர்க்கட்சிக்காரனைத் தோக்கடிக்கணும் என்பதற்காக எங்களுக்கு ரூட் க்ளியர் பண்ணி விடுறார்!
தலையாட்டிட்டு அங்கிருந்து புறப்பட்டு டீக்கடைக்கு வந்தோம்.
ப்ப்பா.. என்னா ராஜதந்திரம்டா? என்றான் இளங்கோ.
இதென்ன ராஜதந்திரம்! அவரு கட்சித் தலைவர் போடுவாரு பாரு ப்ளானு! ஒவ்வொண்ணும் மாஸ்டர் ப்ளானு! அதெல்லாம் அங்கே சாதாரணம்பா என்றார் தோழர்.
ஆனாலும் இது டூ மச் தோழர் என்றேன் நான்.
இதென்ன டூ மச்! ஒனக்குத் தெரியுமா? மொத மொத புலியை கவுன்சிலர் தேர்தலில் நிக்கச் சொன்னதே இந்த நகரச் செயலாளர்தான். முத்து இவரோட தீவிர விசுவாசி. புலி எதிரே சீட் வாங்கி நின்னுட்டா, அவனுக்கு இருக்குற கெட்டப்பேருக்கு முத்து ஈஸியா ஜெயிச்சிருவாருன்னு, இவரே புலிக்கு காசு கொடுத்து சீட் வாங்கச் சொன்னாரு! இவங்க கெட்ட நேரம் புலி தொடர்ந்து அடிச்சுட்டு வரான் என்றார் தோழர்.
திஸ் ஈஸ் தி லிமிட்! இதுக்கு மேலே என்னாலே தாங்க முடியாது. இதெல்லாம் ஐ.ஐ.எம் எம்.பி.ஏ வுலே கூட சொல்லித் தர மாட்டாங்க தோழர் என்றேன்.
யாராலும் கத்துத்தர முடியாதுப்பா! இது அரசியல் என்றார் தோழர்.

வேட்புமனுத் தாக்கலின் போது தெருவிலே இருக்கும் அத்தனை பசங்களையும் அழைச்சுட்டு மேளதாளத்தோட போய் வெற்றிகரமாக முடித்தோம். எங்களுடன் வந்த கூட்டத்தைக் கண்டு முனிசிபாலிட்டியே அலண்டு போச்சுன்னுதான் சொல்லணும். எல்லோரும் எங்க புது கவுன்சிலர் சீனுவுக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிச்சாங்க.
சுயேட்சையா மனு போட வந்திருந்த ஒண்ணு ரெண்டு பேரும் எங்க கூட்டத்தைப் பார்த்துட்டு போடாமலே போயிட்டாங்கன்னு தோழர் சொன்னார்.
எங்கள் வார்டு வேட்புமனுவின் பரிசீலனையின் போதுதான் புலியை நேருக்கு நேராக சந்தித்தோம். முனிசிபல் கமிஷ்னர் அருகில் இருந்த மரநாற்காலில் காலை மடித்து அமர்ந்து கொண்டு தினத்தந்தி பேப்பரை எட்டாக மடித்து முகத்தருகில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தது. முத்தண்ணன் எங்களிடம் ஏதும் பேசாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தது எங்களுக்குச் சங்கடமாக இருந்தது.
மொத்தம் மூன்றே மனுதான். ஒவ்வொரு மனுவாக பிரித்துப் பார்த்துக் கொண்டே வந்தவர் எங்கள் வேட்புமனு வந்தவுடன் திகைத்துப் போய் எங்களை நிமிர்ந்து பார்த்தார்.
வேட்புமனுவை நிரப்பும் பொறுப்பு என்னிடம்தான் தரப்பட்டிருந்தது. ஒரு இன்ஜினியர் என்ற முறையில் அதை அழகான கையெழுத்தில் ஆங்கிலத்தில் நிரப்பியிருந்தேன்.
கையிலிருந்த வேட்புமனுவை எங்கள் முன் நீட்டியபடி, இதென்ன? என்றார் கமிஷ்னர்.
அனைவரும் திகைத்துப் போய் என்னைத் திரும்பிப் பார்த்தனர்.
நாமினேஷன் பேப்பர் மேடம்! இங்கிலீஷ்லே ஃபில்லப் பண்ணக்கூடாதுன்னு எந்த ரூல்புக்லேயும் இல்லையே? என்றேன் கெத்தாக.
அதெல்லாம் இருக்கட்டும்! வேட்பாளரோட கையெழுத்து எங்கே?
அந்தக் கட்டிடம் அப்படியே இடிந்து என் தலை மேலே விழுந்திருந்தால் நான் அத்தனை சந்தோஷப்பட்டிருப்பேன். வேட்புமனுவைத் தொலைச்சிடக் கூடாதுன்னு யாரிடமும் தராமல் என்னிடமே வச்சிருந்ததுலே சீனுவிடம் கையெழுத்து வாங்க மறந்துட்டுருக்கேன்.
வேட்பாளர் கையெழுத்து இல்லாத நாமினேஷன் ஃபாரம். முதல் சுற்றுலேயே ரிஜக்ட் ஆகிடும். அனைவரும் என்னை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்த நான் தலையைக் குனிந்து கொண்டேன். முத்தண்ணனாலே முகத்துலே சந்தோஷத்தை மறைக்க முடியலை. புலி தலையை நிமிராமல் தந்தி பேப்பரிலேயே கவனமாயிருந்தது.
இப்ப என்ன மேடம் பண்றது? என்றான் சீனு.
நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க? எல்லாம் புறப்படுங்க. வார்டு எண் 12! ரெண்டே வேட்பாளர்தான். மிஸ்டர் சுந்தரமூர்த்தி அண்ட் மிஸ்டர் முத்து. அருகிலிருந்த டைப்பிஸ்டிடம், டைப் பண்ணும்மா என்றார்.
தேர்தல் முடிவு அப்பவே தெரிஞ்சு போச்சு! புலி நான்காம் முறையாக எங்கள் கவுன்சிலராகிறது. நாங்கள் நாற்காலியிலிருந்து எழுந்தோம்.
எதற்காக கமிஷ்னரிடம் சொல்கிறேன்னு தெரியாமல் கண்கலங்கியபடி, சாரி மேடம்! இட்ஸ் மை ஃபால்ட் என்றேன். குரல் தழுதழுத்தது. பசங்க யாராவது ஒரே ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் வெடித்து அழுதிருப்பேன்.
எனது தழுதழுத்த குரலைக் கேட்ட புலி, தந்தி பேப்பரில் இருந்து கண்ணை எடுத்து, நாற்காலியிலிருந்து இறங்கி வந்தது. நேராக கமிஷ்னர் டேபிளில் இருந்த எங்கள் மனுவை எடுத்து சீனுவிடம் நீட்டி, இப்ப என்ன? கையெழுத்துதானே போடலை? அதென்ன முப்பது வரி நீட்டமா எழுதப்போறான். ஒத்த வார்த்தைதானே? நீ போட்டு கொடு கண்ணு என்றது.
மொத்த அலுவலகமும் திகைத்து நிற்க, கமிஷ்னர் முத்தண்ணனைப் பார்த்தார். அவரால் எதுவும் சொல்ல முடியாத சங்கடம். சீனு கண்கலங்கியபடி கையெழுத்தைப் போட, நாங்கள் மீண்டும் களத்துக்கு வந்தோம்.
அதன் பிறகு ஒரு மாதம் நடந்ததெல்லாம் ஒரு நாவலுக்குரியவை. சிறுகதைக்குள்ளே சொல்லணும்னா, எங்களோட தேர்தல் அறிக்கையைச் சொல்லலாம்.
மூணே பாயிண்ட்.. சும்மா நச்சுனு இருக்கணும்டா என்றான் ஒருவன்.
முதல் பாயிண்ட் எழுதும்போதே தோழர் வந்துவிட்டார். நமது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அமெரிக்கா என்னவெல்லாம் தொல்லைகள் தருது என விரிவாக சொல்ல ஆரம்பித்தார். பொறுமையிழந்த இளங்கோ, தோழர் முதல் பாயிண்ட் உங்க சாய்ஸ். நீங்க எதை சொன்னாலும் எழுதிக்கிறேன் என்றான்.
இப்படியாக முதலாவது வாக்குறுதி, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை விடாமல் எதிர்ப்போம் என்றானது.
அடுத்து, இன்ஜினியரான என்னோட சாய்ஸ். நதிகளை இணைத்தால் நாட்டுலே வறுமை நீங்கி வளமாயிடும்னு ஒரு கட்டுரை படிச்சிருந்தேன். எனவே இரண்டாவது வாக்குறுதி எங்கள் ஊர் தென்பெண்ணையாற்றை, காவிரியோடும், பாலாறோடும் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றானது.
மூன்றாவது வாக்குறுதி வேட்பாளர் எடுத்துக்கிட்டான். அவனோட ஐடியாபடி எங்களது மூன்றாவது வாக்குறுதி எங்க தெரு பசங்களுக்கு இலவசமா மெடிகல், இன்ஜினியரிங் சீட் வாங்கித் தருவோம் என்றானது. இதைக் கேள்விப்பட்ட சிலர் அன்று மாலையே தேர்தல் அலுவலகம் வந்து அவரவர் பிள்ளைகளின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதிச் சென்றனர்.
சீனுவோட படத்தை வெளியூர் அனுப்பி ப்ளாக் எடுத்து அதைக் கொண்டு ரோஸ்கலர் பிட்நோட்டீஸ்லே தேர்தல் வாக்குறுதிகளோட 10000 காப்பி பிரிண்ட் பண்ணி பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் தந்தோம். மொத்த ஓட்டு 1380தான்.
வார்டு தேர்தல் நோட்டீசை பஸ் ஸ்டேண்டுலே வந்து ஏன் தரீங்க? என ஒரு பெரியவர் கேட்டப்போ, ஒரு கணம் திகைத்து, அது வந்து, இப்பத்திய இளைஞர்களோட லட்சியப் பயணம் எப்படி இருக்கும்னு எங்க தேர்தல் அறிக்கையை பாத்தாவது நீங்களாம் தெரிஞ்சுக்கத்தான் பெரிசு! என்றான் இளங்கோ.
வசுமதி வீட்டுக்கு நோட்டீஸ் தர பசங்க என்னை அனுப்பி விட்டானுங்க. நான் ஒவ்வொரு நோட்டீஸ்லேயும் ஒரு காட்பரீஸ் சாக்லெட் பின் பண்ணி எடுத்துப் போய் கொடுக்க, என்னைப் விழுங்கறாப்லே பார்த்துக்கொண்டே வசீகரமாகச் சிரித்தபடி மொத்தமா பத்து நோட்டீஸை அவள் அள்ளிக்கொண்டாள்.
ஏம்பா! எல்லா வீட்டுக்கும் சாக்லேட் வச்சா தரீங்க? என அவள் அம்மா கேட்டுக் கொண்டே பதிலை எதிர்பாராமல் அவர் பங்குக்கு ஒரு கொத்து நோட்டீசை அள்ளிக் கொண்டார்.
தேர்தல் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. சொல்லப்போனால் புலி பூத்துக்கு உள்ளேயே வரவில்லை. அன்று மட்டும் குடிக்காமல் பளபளப்பாக வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து நெற்றியில் திருநீறுடன் தெருவின் எதிர்திசையில் அமைதியாக அமர்ந்திருந்தது. முத்தண்ணன் வழக்கம் போல வாசலில் நின்றுகொண்டு வரும் ஒவ்வொருவரிடமும் கைகூப்பி ஓட்டுக் கேட்டார். நாங்கள் மீதமிருந்த எங்கள் நோட்டீசை அனைவரின் கைகளிலும் திணித்து அனுப்பினோம்.
வாக்கு எண்ணிக்கையின் போது சீனுவுக்கு ஜெனரல் ஏஜெண்டாக ஏழுமலையை அனுப்பி வைத்தோம். யாருக்கும் பயமில்லாமல் தைரியமா பேசுவான். முத்திரை எதிலுமே சரியாக விழாதது, சின்னங்களுக்கு நடுவில் முத்திரை இருந்தது, முத்திரையே இல்லாதது என சர்ச்சைக்குரிய பதினாறு ஓட்டுகளும் எங்களுடையதுதான் என கடுமையாக அவன் குரல் உயர்த்தி சத்தம் போட, புலி எங்கள் பெட்டியிலேயே அவற்றைப் போடச் சொல்லி தலையாட்டியதாம்!
தேர்தல் முடிவு தினத்தன்று எங்கள் வார்டு முடிவு மதியத்துக்கு சற்று முன்னே வந்தது. பதிவான 1184 வாக்குகளில் முத்தண்ணன் 312, சீனு 88 வாங்கியிருக்க புலி 784 பெற்றிருந்தது. தனது வரலாற்றின் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் புலி நான்காம் முறையாக எங்கள் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றது.
நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தையும் பேச முடியாதபடி அதிர்ந்து போயிருந்தோம்.
ஆக, முத்தண்ணனுக்கு போவ வேண்டிய 88 ஓட்டைதாண்டா நாம பிரிச்சிருக்கோம் என்றான் இளங்கோ.
ம்க்கும்.. அதலயும் 16 ஓட்டு கவுண்டிங்க்லே சண்டை போட்டு நான் வாங்கியது என்றான் ஏழுமலை. தனது வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்ட சீனு வெளியே வரவேயில்லை.
இரண்டு மணிக்கு எங்க தேர்தல் அலுவலகம் மாடிக்கு ஒரு அட்டைப்பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிட்டு வந்து வச்சான் புலியோட கையாள் ஏகாதேசி. பெட்டி முழுக்க பிரியாணி பொட்டலங்கள். புலியண்ணன் குடுத்து அனுப்புச்சுடா! சாப்புடுங்க என்றான்.
நான் மறுநாள் இருந்து யார் முகத்திலும் விழிக்க விரும்பாததால், ப்ராஜெக்ட் ரிவ்யூ இருக்கிறது என சொல்லிட்டு கல்லூரிக்குப் புறப்பட்டேன். இரவு 9 மணிக்கு எனக்கு பஸ். நாங்க கூட வரோம்னு இளங்கோவும், ஏழுமலையும் எனது பையை சைக்கிளில் வைத்துத் தள்ளிக் கொண்டு வர நாங்கள் மவுனமாக எங்கள் தெருவை கடந்து சென்றோம்.
ஒரு மாதமாக தேர்தல் பிரச்சாரம், ஆலோசனைக்கூட்டங்கள் என நாங்கள் கட்டியாண்ட தெரு! ஒவ்வொரு வீட்டிலும் காலில் விழுந்து அவர்களிடம் சத்தியம் பெற்று எங்களுக்காக நாங்கள் உறுதி செய்திருந்த வாக்குகள் மட்டும் 900 இருக்கும். எங்கள் தெரு மக்கள் அத்தனை பேருமே பொய் சத்தியம் செய்வார்கள் என்ற சாத்திய கூறினை நம்ப முடியாமல் பேச்சற்றுப் போயிருந்தோம்.
சீனு வீடு வெளி விளக்குக்கூட போடப்படாமல் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
வசுமதி வீட்டு வாசல் படிகளை நிரப்பிக் கொண்டு பெண்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு பவுர்ணமி இரவு.
பாவாடை,தாவணியில் வசுமதி தேவதைப் போல நடுப்படியில் அமர்ந்து கொண்டு கொண்டிருக்க, அவரது அம்மா அதற்கு மேல் படியில் அமர்ந்து கொண்டு தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு தேவதையின் தலையில் ஈர்குச்சி கொண்டு இழுத்து இழுத்து பேன் பார்த்தக் காட்சி நாங்கள் வாங்கிய ஓட்டு எண்ணிக்கையை விட அபத்தமாக இருந்தது.
வீட்டைக் கடக்கும் போது, வசுமதியின் அம்மா சத்தமாக என்னப்பா! காலேஜுக்கா? என்றார்.
ஆமாங்க.. நாளைக்கு ப்ராஜெக்ட் ரெவ்யூ இருக்கு என்றேன்.
அமெரிக்கா போவப்போறீயாமே?
ஆமாமாம்.. என் மச்சானுக்கு கேம்பஸ் இண்டர்வியூலே வேலை கிடைச்சிருக்கு! மொத சம்பளமே டாலர்லேதான் என்றான் இளங்கோ.
நான் வசுமதியையே பார்த்துக் கொண்டிருந்தேன். வைத்த கண் வாங்காமல் என்னை அதே விழுங்கல் பார்வைப் பார்த்துக் கொண்டு வாயில் எதையோ போட்டு மென்று கொண்டிருந்தாள். நான் தந்திருந்த சாக்லெட்டில் மிச்சம் வைத்திருந்திருப்பாள் போலிருக்கு.
என்னமோப்பா.. நம்ம பசங்கலாம் நல்லா படிச்சு மேலே வந்தா சந்தோஷம்தான். ஆனா படிச்சவுடனே வெளிநாட்டுக்கு ஓட்றீங்களே! இங்கியே இருந்து நம்ம தாய் நாட்டை முன்னேத்த வேணாமா? என்றார் சரோஜாக்கா.
ஏழுமலை கடுப்பாகிட்டான். ஆங்! நல்லா முன்னேத்த வுட்ருவீங்களே! 88 ஓட்டை போட்டு.. சீனுவுக்கே ஓட்டுப் போடாத மக்கள்தானே நீங்களாம்?
அடப்போங்கடா! இவனுங்க வேற கிண்டல் பண்ணிட்டு.. சீரியஸாவா நீங்க எலக்சென்லே நின்னீங்க? சொம்மா தமாசுக்குதானே?
என்னது? தமாசுக்கா? உயிரைக் கொடுத்து வேலை செஞ்சோமே! ஒங்க ஒவ்வொருத்தர் கால்லேயும் உழுந்தோமே! எல்லாம் தமாசாவா தெரிஞ்சது? அட! சீனுவை விடுங்க.. போயும் போயும் புலிக்கு இத்தனை பேரு ஓட்டுப் போட்டிருக்கீங்களே? எங்கே? புலிக்கு ஓட்டுப் போட ஒரே ஒரு நியாயமான காரணத்தை சொல்லுங்க பாப்போம்!
ஏழுமலை பொறிந்து தள்ளினான்.
சரோஜாக்கா சளைக்கவில்லை.
ஒண்ணு என்னடா? மூணு காரணம் சொல்றேன் கேட்டுக்கோ.
ஒண்ணு புலி எவ்ளோ போதையிலே இருந்தாலும் தெருவை விட்டு இங்க, அங்கே போவாது. கூப்டா ஓடி வரும். கவுன்சிலர்னா இப்டிதாண்டா இருக்கணும்.
ரெண்டு, பெரியவங்க,சின்னவங்க பார்க்காது. மேல் ஜாதி, கீழ் ஜாதி பார்க்காது. யார் ஊட்டுக்குனாலும் உரிமையா உள்ளே வரும். வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்புடும். அவ்ளோ நல்ல குணம்.
மூணாவது, முக்கியமானது. வயசு பொண்ணுங்க கொசகொசன்னு இருக்குற தெரு நம்முது. வெளியாள் ஒருத்தரையும் லேசுலே புலி உள்ளே வுடாது. ஒவ்வொருத்தரையும் நிறுத்தி தரவா விசாரிக்கும். தப்பான ஆளுன்னா ஃபைன் போட்டுரும். ஆமாம்.
என்னது! ஃபைன் போட்டுருமா? நாங்கள் திகைச்சுப் போய் நின்னுட்டோம்.
இப்பேர்ப்பட்ட மனுஷனை விட்டுட்டு வேற யாருக்கு ஓட்டு போடறதாம்? வண்டானுங்க! ஏகாதிபத்யம்.. எங்க ஊட்லே பைத்தியம்னு.. எடுபட்டவனுங்க.
இப்படியாக, சரோஜாக்காவின் அரசியல் பாடத்துடன் எங்கள் தெரு இளைஞர்களின் லட்சியப் பயணம் அந்த இரவின் நிலவொளியில் நிறைவுற்றது.
“எங்கள் தெரு மக்கள் அத்தனை பேருமே பொய் சத்தியம் செய்வார்கள் என்ற சாத்திய கூறினை நம்ப முடியாமல் பேச்சற்றுப் போயிருந்தோம்”. 😆🤣